
Wednesday, Oct 01, 2025
என் அன்பு இளம் உள்ளங்களுக்கு, சர்வ வல்லவராம் இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்!
அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை. (அப்போஸ்தலர் 26:19)
பவுல் கிறிஸ்துவை, எப்பொழுது தன் வாழ்வில் கண்டு தரிசித்தானோ, அன்று முதல் அவன் கிறிஸ்துவை பற்றியதான புரிந்து கொள்ளுதலையும், அவன் மூலமாக ஆண்டவரால் நிறைவேற்றப்பட வேண்டிய தரிசனத்தையும் தெளிவாக புரிந்துக்கொண்டான். ஆண்டவரைக் காண்பதற்கும், அவருடைய தரிசனத்தைப் பெறுவதற்கும் அவருக்காகக் காத்திருக்க வேண்டியது அவசியம். ஆண்டவர் கொடுக்கின்ற தரிசனம் நம் வாழ்க்கையை மாற்ற வல்லமையுள்ளது.
யாக்கோபு ஆண்டவருடைய தரிசனத்தைப் பெற்ற பின், இஸ்ரவேலாக மாறினான். மோசே கர்த்தரைத் தரிசித்த பின், தன்னுடைய ஜனம் விடுதலையடைய வேண்டும் என்கிற தரிசனத்தை உடையவனாக மாற்றப்பட்டான். கோழையான கிதியோன் ஆண்டவருடைய தரிசனத்தைப் பெற்ற பின் மாபெரும் வீரனாக மாறினான்.
தேவனாகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களைப் பார்த்து “அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்” (லூக்கா 10:2) என்று சொன்னார். ஆனால் சீஷர்களினால் அதை உணர முடியவில்லை. தரிசனத்துடன் இருக்கும் மக்களால் மட்டுமே அறுவடைக்கு ஆயத்தமாக விளைச்சல் உள்ளது என்பதின் அர்த்தத்தையும், அவசியத்தையும் உணர்ந்துகொள்ள முடியும். நம்முடைய கண்களை நாம் உயர்த்தி பார்க்கும்போது தான், பவுல் பார்த்ததைவிட அதிகமாக பார்க்க முடியும். இந்தியர்களை இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தால் சந்திப்பது நம்முடைய இயக்கத்தின் தரிசனம். இந்த தரிசனம் நிறைவேற உன்னை அர்ப்பணித்து, உனது தரிசனத்தைக் கூர்மைபடுத்த வா என அழைக்கிறோம்.
அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள வாலிபர் கூடுகைகள், முகாம்கள், பயிற்சி கூடுகைகள் மற்றும் பணித்தள விஜயங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்துத் தர ஜெபியுங்கள். நமது பணித்தளத்தில் நாம் சந்திக்கின்ற உபத்திரவங்களினால் மிஷனெரிகள் மற்றும் விசுவாசிகள் சோர்ந்து போகாமல், கர்த்தருடைய பெலன் அவர்களைத் தாங்க, தேசத்தில் ஆண்டவருடைய இராஜ்யம் தடையில்லாமல் கட்டப்பட நமது ஜெபங்களில் நினைவு கூறுவோம்.
தேவ கிருபை எப்பொழுதும் உங்களோடிருப்பதாக!
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 