
Monday, Dec 01, 2025
ராஜாவின் வேலையைச் செய்திட வா!
என் அன்பு இளம் நெஞ்சங்களுக்கு, கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!
1904ஆம் ஆண்டில் வேல்ஸ் நாட்டில் மாபெரும் எழுப்புதல், பல ஆயிரம் மக்கள் மனந்திரும்பினர். இந்த மாபெரும் அறுவடைக்குக் காரணம் யார்? இவான் ராபர்ட்ஸ் (1879-1951) என்ற பக்தன் கிறிஸ்துவின் அன்பினால் உந்தப்பட்டு 13 ஆண்டுகள் கண்ணீருடன் ஜெபித்து, கடவுளின் அன்பை மக்களுக்கு எடுத்துச் சொன்னதால் நடந்தது.
“யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்
என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்:
இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்” (ஏசாயா 6:8).
மேற்காண்கிற வசனத்திற்கு தன்னை அர்ப்பணித்து இந்தியாவிற்கு வந்த வில்லியம் கேரியின் ஊழியத்தின் விளைவுகள் எத்தனையான மாற்றத்தை மேற்கு வங்காள மாநிலத்திற்கு தந்தது மாத்திரமல்ல, அவருடைய அர்ப்பணிப்பான தியாகமுள்ள ஊழியத்தின் மூலமாக அவர் “நவீன மிஷனெரி இயக்கங்களின் தந்தை” என அழைக்கப்பட்டார்.
வேதாகமம் முழுவதும் பல்வேறு சூழ்நிலையில் இருந்து கடவுள் தம்முடைய ஊழியத்தைச் செய்வதற்கு அழைப்பதை நாம் பார்க்கிறோம். தமது மக்களை எகிப்திலிருந்து வெளியே நடத்திச் செல்ல மோசேயை அழைத்தார். தமது மக்களை ஆண்டு நடத்த மேய்ப்பனாகிய தாவீதை அழைத்தார். இவைகள் அனைத்திற்கும் மேலாக முழுநேரப் பணி செய்யும்படி இயேசுவே அழைத்தார். (இந்த பட்டியலில்) இப்படி தொடர்ச்சியாக பேதுரு, மத்தேயு, பவுல் எனத் தொடர்கிறது.
தம்பி, தங்காய்! நமது ராஜாவின் வேலையைச் செய்ய எப்போதும் காலி இடமுண்டு. டாக்டர், இஞ்சினியர், அட்வகேட், டீச்சர் இன்னும் இது போன்ற வேலைகளுக்கு எப்போதும் கூட்டமாக, போட்டியாக உள்ள இந்த நாட்களில், ராஜாவினுடைய வேலையை (கிறிஸ்துவினுடைய ஊழியம்) செய்ய வருவோர் மிகவும் குறைந்துக் கொண்டே இருக்கின்ற நிலையை நாம் பார்க்கிறோம். நமது ஆர்வம் அல்லது தாலந்து எதுவாயிருந்தாலும், ஆண்டவருடைய தோட்டத்தில் அதற்கேற்ற வேலைகள் உண்டு.
டேவிட் லிவிங்ஸ்டன் ஒரு பூகோள ஆராய்ச்சியாளர். இவர் மிஷனெரியாகச் சென்றார். C. T. ஸ்டட் ஒரு புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர், இவரும் மிஷனெரிப் பணியை தெரிந்து கொண்டார். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல, மேரி ஸ்லேசர், ஐடா ஸ்கடர், பண்டித ராமாபாய் இப்படி ஆண்டவருடைய ஊழியத்தில் இன்றும் அநேக பெண்கள் வல்லமையாய் ஆண்டவருக்கு மகிமையான ஊழியத்தைச் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட மகிமை நிறைந்த ராஜாவின் வேலையைச் செய்ய அழைப்பு இல்லை, தரிசனம் இல்லை என்ற சாக்கு, போக்குகளைச் சொல்லாமல், அவருடைய சத்தத்திற்குச் செவி கொடுத்து, அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம் என்ற வசனத்திற்கு நம்மை அர்ப்பணித்து, ராஜாவின் உன்னதமான வேலையைச் செய்ய முன்வருவோமா?
2025ஆம் ஆண்டு 11வது மாதம் வரை கர்த்தர் நமது வாலிப பிரிவின் ஊழியங்களை மிகவும் வல்லமையாய் ஆசீர்வதித்து வழிநடத்தி வந்தார். எங்களுக்காக ஜெபித்த, எங்களோடு ஊழியம் செய்த, எங்களை ஊக்குவித்த அத்தனை தேவனுடைய பிள்ளைகளையும் இந்நாட்களில் நன்றியோடு நினைவுக் கூறுகிறோம்.
முதல் கிறிஸ்துமஸ் அன்று மேய்ப்பர்கள் பிள்ளையைக் குறித்த செய்திகளை எங்கும் சொன்னார்கள். கிறிஸ்துமஸ் காலத்தை நற்செய்திப் பணிக்காக செலவிடுவோம்! முதல் வருகையைக் கொண்டாடும் நாம், நம் ராஜாவினுடைய இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவோம்.
உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாகட்டும்.
கேரீத் வாசகர்கள் அனைவருக்கும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேவ கிருபை எப்பொழுதும் உங்களோடிருப்பதாக!
கிறிஸ்துவின் உன்னதப் பணியில்
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 