
Sunday, Feb 01, 2026
ஊழியக் களத்தில் பரிசுத்தம் காண்போம்!
பரிசுத்தமுள்ளவரும், பரிசுத்தத்திற்கென்று அழைத்தவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேரீத் பத்திரிக்கையை வாசிக்கிற வாலிபர்கள் அனைவருக்கும் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
“உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல,
நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.” (1 பேதுரு 1:15)
கர்த்தர் பரிசுத்தமுள்ளவர், அதனால் அவருடைய மக்களும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தின் மூலம் பேதுரு கூறுகிறார். ஏனென்றால் பரிசுத்தம் என்பது இவ்வுலகில் காணப்படும் பாவத்தை விட்டுவிட்டு கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவரை ஏற்றுக்கொண்டு, அவரை ஆராதிக்கும் ஒரு பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதாகும். ஆனால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லியும், நாம் ஏன் பாவத்தில் விழுந்து எழுந்திருக்கிறோம்? ஏனென்றால் இரட்சிக்கப்படும்போது நாம் பாவத்தின் தண்டனையிலிருந்து விடுதலை பெறுகிறோம். பாவத்தின் பிரசன்னத்திலிருந்து விடுதலை என்பது கிறிஸ்துவோடு வாழும் எதிர்கால வாழ்க்கையாகும். இப்போது நாம் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் பாவ சோதனையின் வழியாகவும், பாவம் செய்யக் கூடியதான சூழ்நிலை வழியாகவும் கடந்து வந்தாலும் பரிசுத்த ஆவியானவரின் துணையைக் கொண்டு பாவத்தை மேற்கொள்ள முடியும் (1 யோவான்2:1; 3:6).
வாலிப நாட்களில் பல பாவ வழிகளில் நடந்து, கள்ள உபதேசங்களைக் கேட்டு, இயேசுவை விட்டு தூரம் சென்று வாழ்ந்தவர் அகஸ்டின். ஒரு நாள் பூங்கா ஒன்றில் தனிமையாக பல மன குழப்பங்களோடு உட்கார்ந்திருக்கும்போது ரோமர் 13:12 என்ற வசனத்தை “எடுத்து வாசி” என்ற சத்தத்தைக் கேட்டு வேதத்தை திறந்து படித்தார். உடனே, அவர் தன் வாழ்க்கையில் செய்த தவறுகளை அறிக்கையிட்டு இயேசுவிடம் மனந்திரும்பினார். பின்னர், அவர் அநேக பாவிகளைக் கிறிஸ்துவிடம் கொண்டுவருகிற பரிசுத்த அகஸ்டினாக மாறினார். அவருடைய பாவ அறிக்கையில் அவர் சொன்னது: “இயேசுவே உம்மை நான் புரிந்துக் கொண்டு அன்பு செய்வதற்கு எவ்வளவு பின்தங்கி விட்டேன். நீர் எனக்குள் இருந்தீர், ஆனால் நானோ வெளி உலகத்தில் அலைந்து திரிந்துக் கொண்டிருந்தேன். நீர் என்னோடு இருக்க, நான் உம்மோடு இல்லாதிருந்தேன். இப்போது உம் மீது மட்டுமே எனக்கு பசியும், தாகமும் உள்ளது. நீர் தரும் உண்மையான அமைதிக்காக நான் ஏங்கி நிற்கிறேன்.”
வாலிபர்களாகிய நீங்கள் எத்தனை பேர் இயேசுவின் அன்பை விட்டுவிட்டு, ஏதோ ஒருவருடைய அன்புக்காக ஏங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், உங்களை சற்று ஆராய்ந்துப் பாருங்கள். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” (மத். 22:37) என்ற வசனத்தின்படி இயேசு உன்னை அவரோடு நெருங்கி வாழ்ந்து பாவத்தை விட்டு முற்றிலும் அவருக்காக பரிசுத்தமாய் வாழ அழைக்கிறார். நீ வாழும் இடம், படிக்கும் இடம் மற்றும் வேலை பார்க்கும் இடமே உன்னுடைய ஊழியக்களமாகும். இந்த ஊழிய களத்தில் பரிசுத்தமுள்ள வாழ்க்கை வாழ உன்னை ஒப்புக் கொடுப்பாயா (ரோமர் 12:1). ஒப்புக்கொடுக்கிற உன்னை பரிசுத்தமுள்ள கர்த்தர் பரிசுத்தப்படுத்துவார்.
“பரிசுத்தமற்ற உலகிலிருந்து, பரிசுத்தமற்ற ஒரு மனிதனை கடவுள் எடுத்து, அவனை பரிசுத்தமாக்கி, மறுபடியும் இந்த பரிசுத்தமற்ற உலகில் வைத்து, பரிசுத்தமாய் காக்கிறாரே அதுதான் அற்புதங்களில் எல்லாம் அற்புதம்.” - லியோனார்டு ரேவன்ஹில்
ஜனவரி மாதத்தில் நடந்த வாலிபர் முகாம்கள் சிறப்பாக நடைபெற கர்த்தர் உதவிச் செய்தார். இதற்காக பாரத்தோடு ஜெபித்து, உழைத்து, செயல்பட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்தில் லெந்து நாட்கள் ஆரம்பிப்பதால் வாலிபர்கள் உங்கள் பகுதியில் ஒரு மணி நேரமோ அல்லது மூன்று மணி நேரமோ உபவாசமிருந்து குழுவாக தேசத்திற்காகவும், மிஷனெரி பணிக்காகவும் ஜெபியுங்கள். நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் வளருவதற்கு இந்நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தேவக் கிருபை உங்களோடிருப்பதாக.
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 